நள்ளிரவில் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா… இலங்கையில் பதற்றம்

அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு, பணவீக்கம், முக்கிய வருவாயான சுற்றுலா துறை முடக்கம் ஆகியவை, இலங்கையை பெரும் பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது. அத்தியாவசிய பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏரிபொருளை இறக்குமதி செய்ய போதிய பணம் இல்லாததால், அங்கிருக்கும் மக்கள் தினமும் 13 மணி நேர மின்வெட்டை சந்தித்து வருகின்றனர்.

கடும் நெருக்கடியில் தவித்த மக்கள், தற்போது அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.கோத்தபய ராஜபக்ச அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தின. மார்ச் 31 அன்று, அதிபர் கோத்தபய ராஜபக்ச வீட்டின் வெளியே ஏரளாமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த இலங்கையில் அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில், நேற்றைய தினம் அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியதாக செய்திகள் பரவின. பின்னர், அவை பொய்யென்று இலங்கை அரசு சார்பில் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் விளக்கம் தெரிவித்தது.

இந்நிலையில், நேற்றிரவு அனைத்து அமைச்சர்களும் மகிந்த ராஜபக்சவிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளனர். இந்த தகவலை கல்வி அமைச்சரும் அவைத் தலைவருமான தினேஷ் குணவர்தனா செய்தியாளர்கள் சந்திப்பின் போது உறுதிப்படுத்தினார். இருப்பினும், அமைச்சர்களின் ராஜினாவிற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை.

அரசியல் வல்லுநர்கள் கூற்றுப்படி, அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றாக்குறையால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் “தவறாகக் கையாண்டதாக” பொதுமக்களிடமிருந்து கடுமையான அழுத்தத்திற்கு அமைச்சர்கள் ஆளானதாக கூறப்படுகிறது.

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு உத்தரவை மீறி, பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிரான பேரணியை நடத்த முயன்ற 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி போராட்டம் வெடித்துள்ள நிலையில் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்திருப்பதால் புதிய அமைச்சரவை விரைவில் அமைக்கப்படும் என தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.