இலங்கையிலிருந்து தப்பி வந்த இளைஞர் – பல நாள் தேடலுக்கு பிறகு சேலத்தில் கைது

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து பைபர் படகு மூலம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிக்கு தப்பி வந்த இலங்கை இளைஞரை தேவிபட்டினம் மரைன் போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே ஜமீன்தார்வலசை கடற்கரை கிராமத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி நள்ளிரவில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கி நின்றது. இதனையறிந்த தேவிபட்டினம் மரைன் போலீஸார் படகை கைப்பற்றி, அன்றைய தினமே நடுக்கடலிலும், கடற்கரை பகுதிகளிலும் யாரும் மர்ம நபர்கள் அல்லது கடத்தல்காரர்கள் வந்துள்ளனரா என விசாரணை செய்தனர். போலீஸார் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள இலங்கை மக்கள் உள்ள மறுவாழ்வு முகாம்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சேலம் மறுவாழ்வு முகாமிற்கு இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்ததாக தகவல் கிடைத்தது.

அதனையடுத்து மரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ் தலைமையிலான போலீஸார் சேலம் சென்று இலங்கை இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் இலங்கை கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் நித்தியானந்தா (34) எனவும், மீனவரான இவர் கடந்த மார்ச் 11-ம் தேதி இலங்கையிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு சட்டவிரோதமோக ஜமீன்தார்வலசை கடற்கரைக்கு தப்பி வந்தார் எனவும் தெரிய வந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஏற்பட்ட சண்டையில் மன உளைச்சலில் இருந்ததாகவும், மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையாலும் இந்தியா தப்பி வந்துள்ளார். மேலும் மார்ச் 10-தேதி இலங்கையிலிருந்து புறப்பட்டு 11-ம் தேதி நள்ளிரவு இங்கு வந்துள்ளார். அதனையடுத்து கடற்ரையிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலைக்கு நடந்து சென்று, அவ்வழியாகச் சென்ற லாரியில் ஏறி தஞ்சாவூருக்கு தப்பியுள்ளார்.

அங்கு கூலி வேலை செய்ததாகவும், நேற்று நண்பரை பார்க்க சேலம் மறுவாழ்வு முகாமிற்கு சென்றதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து மரைன் போலீஸார் நித்தியானந்தாவை கைது செய்து தேவிபட்டினம் போலீஸில் ஒப்படைத்தனர். தேவிபட்டினம் போலீஸார் நித்தியானந்தா பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வந்ததாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.