இலங்கை அரசுக்கான ஆதரவை தொழிலாளர் காங்கிரஸ் வாபஸ் பெற்றது

கொழும்பு:

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க முடியாமல் ராஜபக்சே குடும்பத்தினர் கடுமையாக திணறியபடி உள்ளனர்.

தவறான பொருளாதார கொள்கை காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை அனைத்தும் உயர்ந்து விட்டது. மின்சாரம், டீசல், அரிசி, கோதுமை உள்ளிட்ட பல பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

வரலாறு காணாத வகையில் பட்டினி கிடக்க நேரிடுவதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தெருக்களில் இறங்கி போராடத்தொடங்கி உள்ளனர். நேற்று இலங்கையின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இரவில் தீப்பந்தங்களை ஏந்தி பல இடங்களில் ஊர்வலம் நடைபெற்றது. பசில் ராஜபக்சே வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினார்கள்.

பொருளாதார நெருக்கடியை தவிர்க்க அதிபர் கோத்தபய ராஜபக்சே எதிர்கட்சிகளின் உதவியை நாடி உள்ளார். இதற்காக 26 மந்திரிகளையும் பதவி விலக வைத்தார். ஆனால் கோத்தபய ராஜபக்சேயின் கோரிக்கையை எதிர்கட்சிகள் ஏற்கவில்லை.

புதிய அமைச்சரவையில் சேர மறுத்த எதிர்கட்சிகள் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அவர்கள் இருவரும் பதவி விலகும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று அறிவித்துள்ளனர்.

எதிர்கட்சிகளுக்கு பணியமறுக்கும் கோத்தபய ராஜபக்சே சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார். இதனால் அவரது கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை அவரை ஆதரித்து வந்த சுதந்திரா கட்சி ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் இன்று காலை தனது அதிரடி முடிவை வெளியிட்டது. இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை முழுமையாக விலக்கி கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கோத்தபய ராஜபக்சே அமைச்சரவையில் ஜீவன் தொண்டைமான் இணை அமைச்சராக இருந்து வந்தார். இன்று காலை அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழர் கட்சியும் கைவிட்டதால் ராஜபக்சே குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோத்தபய ராஜபக்சேக்கும், அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சேக்கும் பல்வேறு வி‌ஷயங்களில் மோதல் இருந்து வருகிறது. தற்போது அந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இருவரும் பதவியை காப்பாற்றிக் கொள்வது எப்படி என்று திணறி வருகிறார்கள்.

நேற்று கோத்தபய ராஜபக்சே தலைமையில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய கோத்தபய ராஜபக்சே, மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றார்.

எம்.பி.களிடம் அவர் யாருக்காகவும், எதற்காகவும் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தார். ஆனால் அவர் கூட்டிய கூட்டத்தில் அரசுக்கு ஆதரவு அளிக்கும் 11 கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை.

இதற்கிடையே ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிர்ப்பு தெரிவித்து 50 எம்.பி.க்கள் இன்று சுயேட்சை உறுப்பினர்களாக மாற திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழர் கட்சி எம்.பி.க்களும் சுயேட்சையாக மாற முடிவு செய்துள்ளனர்.

இத்தகைய காரணங்களால் இலங்கையில் கோத்தபய அரசுக்கு ஆபத்தான நிலை உருவாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்… சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்- ராதாகிருஷ்ணன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.