“சொத்து வரி உயர்வை ரத்து செய்வது தொடர்பாக ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்!" – துரை வைகோ

தேனியில் மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ தலைமை வகித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், “பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது விலையை கட்டுக்குள் வைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வீடு வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நடுத்தர வர்க்கத்தை பாதிக்கும் இதை திரும்பப்பெற வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கொண்டு செல்லும் பொருள்களை தடுத்து நிறுத்தக்கூடாது. சுங்கக் கட்டணத்தை உயர்த்துவோம் என ஒன்றிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துரை வைகோ

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, “கொரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டுள்ள மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு மரண அடியாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் விலையை உயர்த்த வேண்டியதுள்ளது என்று கூறும் ஒன்றிய அரசு, 5 மாநில தேர்தலுக்கு பின்னர் தான் விலையை உயர்த்தியுள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கின் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 40 டாலருக்கும் கீழ் குறைந்திருந்த போதும் கூட கலால் வரியை 70 சதவீதம் அளவிற்கு உயர்த்தி அப்போதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்ததான் செய்ததே தவிர ஒன்றிய அரசு குறைக்க வில்லை.

துரை வைகோ

மேலும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகளைக் காட்டிலும் திமுக அரசின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “நியூட்ரினோ திட்டத்தை முதன் முதலில் எதிர்த்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தான், அவரின் எதிர்ப்பால் தான் இந்தத் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரும் இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். வைகோ அவர்கள் போராட்டத்தின் மூலம் பெற்ற பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளில் நியூட்ரினோ திட்டமும் ஒன்றாகும்.

துரை வைகோ

சொத்து வரி உயர்வு குறித்து தமிழக முதல்வரிடம் மதிமுக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களை பாதிக்கும் சொத்துவரி உயர்வை ரத்து செய்வது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம். மேலும் சொத்து வரி உயர்வை எதிர்த்து போராடும் அதிமுகவினர், மத்திய அரசு உயிர்காக்கும் மருந்துகளின் விலை பெட்ரோல் விலை உயர்த்தியதை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்தவில்லை?” என்றும் குற்றம் சாட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.