6,029 அரசுப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள், 7,500 ஸ்மார்ட் வகுப்பறைகள் – பள்ளிக் கல்வித் துறையின் 34 அறிவிப்புகள்

சென்னை: ரூ.150 கோடியில் 7,500 திறன் வகுப்பறைகள் (Smart Class Room), உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், ஆங்கில மொழி ஆய்வகங்கள், செம்மைப் பள்ளிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பாரம்பரிய கட்டடங்களைப் புதுப்பித்தல், நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள், பள்ளிகளில் காய்கறித் தோட்டம், பள்ளி சதுரங்க ஒலிம்பியாட், கணினித் தேர்வு மையங்கள், நூலகங்களில் Wi-fi வசதி, வயது வந்தோருக்கான புதிய எழுத்தறிவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். அதில் இடம்பெற்ற 34 முக்கிய அறிவிப்புகள்:

> திறன் வகுப்பறைகள்: 2022-23ஆம் கல்வியாண்டு தொடங்கி நான்கு ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் (Smart Class Room) ஏற்படுத்தும் முயற்சியின் முதற்கட்டமாக நடப்பாண்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

> உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைத்தல்: 2713 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் ரூ.210 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்பெறுவர்.

> பள்ளிப் பராமரிப்புக்கென தனி நிதி: பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், கழிவறைகளைத் தூய்மை செய்தல், இரவுக்காவல் பணியினை மேற்கொள்ளல் போன்ற சேவைகள் வெளிப்பணியமர்த்துதல் (Outsourcing) வாயிலாக செயல்படுத்தப்படும். அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இத்திட்டம் 2022-23ஆம் கல்வியாண்டு முதல் ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> ஆங்கில மொழி ஆய்வகங்கள்: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத மற்றும் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> விரிவான பள்ளிக் கட்டமைப்புத் திட்டம்: 1000 மாணவர்களுக்கு மேல் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் அனைத்துத் தேவைகளையும் வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். முதல் கட்டமாக நடப்பாண்டில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.

> செம்மைப் பள்ளி (School of Excellence): அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு கல்வி, கவின்கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு என கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உலகத் தரத்திலான பள்ளி சென்னையில் அமைக்கப்படும். சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

> பாரம்பரிய பள்ளிக் கட்டடங்கள் புதுப்பித்தல்: தமிழ் அறிஞர்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பல்துறை சாதனையாளர்கள், அறிவியல் அறிஞர்கள் படித்த பள்ளிகளும், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய பள்ளிக் கட்டடங்களும் அவற்றின் தனிச்சிறப்பு மாறாமல் புதுப்பிக்கப்படும்.

நூற்றாண்டு காணும் பள்ளிகளைச் சிறப்பிக்கும் வகையில் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படும். இப்பள்ளி நூலகங்களிலுள்ள அரிய நூல்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் குறித்த ஆவணங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். இத்திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

> பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல்

> சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது

> ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி: தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு, குடியேற்றப் பகுதிகளின் காலக்கண்ணாடியென கீழடி, சிவகளை உள்ளிட்ட தமிழகமெங்கும் விரவியிருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு சிறப்பாகக் கொண்டு சேர்க்கும் வண்ணம் தொல்லியல் துறை வாயிலாக ஆர்வமுடைய 1000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் பயிற்சி அளிக்கப்படும்.

> நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள்: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். 25 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா

> கோடைக் கொண்டாட்டம் – சிறப்புப் பயிற்சி முகாம்

> சாரண சாரணியர் முகாம்களுக்கு (Jamboree) நிதி ஒதுக்கீடு

> மாணவர் மன்றங்களைப் புதுப்பித்தல்

> கலைத் திருவிழா

> கணினி நிரல், எந்திரனியல் மன்றங்கள் மற்றும் ஹேக்கத்தான்: மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழில் நுட்ப அறிவு மற்றும் கணினி மொழி மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள் (Computer Coding Club) மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பமான எந்திரனியலைக் (Robotics) கற்றுக்கொள்ள எந்திரனியல் மன்றங்கள் (Robotics Club) பள்ளிகளில் ஏற்படுத்தப்படும். மேலும் இணையப் பாதுகாப்பு மற்றும் Ethical Hacking தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு ஆண்டுதோறும் மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படும்.

> பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம்

> மாணவர்களின் உடல்நலன் காக்க சிறப்புப் பயிற்சிகள்

> பள்ளிகளில் காய்கறித் தோட்டம்: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் மாணவர்களால் ஏற்படுத்தப்படும். அவற்றில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் அப்பள்ளிகளின் சத்துணவில் பயன்படுத்தப்படும். இத்திட்டம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

> பள்ளி சதுரங்க ஒலிம்பியாட்: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> சிறார் பருவ இதழ் மற்றும் ஆசிரியர் மாத இதழ்: மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கவும் அவர்களின் உள்ளார்ந்த படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்படும். மேலும், ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்கவும் சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் கனவு ஆசிரியர் என்ற மாத இதழ் வெளியிடப்படும். சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

> மேல்நிலை கணினிப் பிரிவு மாணவர்களுக்கு கட்டண விலக்கு: அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022-23ஆம் கல்வி ஆண்டிலிருந்து, ரூ.200 தனிக் கட்டணமாக வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும். இதனால் ஆண்டுதோறும் 3 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இதற்கென ஆகும் செலவினம் ரூ.6 கோடியை அரசே ஏற்கும்.

> மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இருப்பிடத்திலேயே கல்வி: பல்வகைக் குறைபாடுகள் காரணமாக (Children with multiple disabilities voitorflebo) வர இயலாத 10,146 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி அவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்த ரூ.8.11 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்

> அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாதாந்திர பெற்றோர் கூட்டம்

> கணினித் தேர்வு மையங்கள் அமைத்தல்: ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வுகளைத் திட்டமிட்ட கால அட்டவணைப்படி விரைந்து நடத்திடவும், போட்டித்தேர்வு நடைபெறாத காலங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலும் அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> நூலக நண்பர்கள் திட்டம்

தமிழகத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் நூலக சேவை கிடைக்கப்பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தன்னார்வலர்கள் வாயிலாக நூலக சேவை வழங்கப்படும். இத்திட்டம் 15 லட்சம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் ரூ.56.25 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> மெய்நிகர் நூலகம் (Virtual Reality Library): நூலகங்களைப் பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் தொழில்நுட்ப நூலகம் (Virtual Reality Library) 76 நூலகங்க ளில் ஏற்படுத்தப்படும். இத்திட்டம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.57.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> நூலகங்களில் wi-fi வசதி: தமிழக அரசு பொது நூலகங்களை நாடிவரும் வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 352 நூலகங்களில் இலவச wi-fi இணைய வசதி ஏற்படுத்தப்படும். இத்திட்டம் 75,000 வாசகர்கள் பயன்பெறும் வகையில் ரூ.23.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

> TN talk: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் சர்வதேச அளவில் பல்துறை நிபுணர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் புகழ்பெற்ற அறிஞர்களின் உரைகள் மிகச்சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அரங்க அமைப்புடன் TN talk என்ற பெயரில் நிகழ்த்தப்படும். இணையம் வாயிலாக உலகெங்கும் உள்ள தமிழர்களைச் சென்றடையும் வகையில் இத்திட்டம் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> நாளைய தலைமுறைக்கு நாட்டுடைமை நூல்கள்: பள்ளி , கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள் மற்றும் பொது வாசகர்களிடையே தமிழ், கலை மற்றும் பண்பாட்டு ஆர்வத்தை வளர்க்கும் வகையில், தமிழக அரசால் நாட்டுடையாக்கப்பட்ட பல்வேறு அறிஞர்களின் படைப்புகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 20 நூல்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

> கலைக்களஞ்சியங்கள் ஆவணப்பதிப்பு: வரலாறு மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் தமிழ் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில், அறிஞர் பெரியசாமி தூரன் அவர்கள் தொகுத்த கலைக்களஞ்சியங்கள் 10 தொகுதிகளும் சிறார் களஞ்சியங்கள் 10 தொகுதிகளும் ஆவணப்பதிப்பாக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

> நூற்றாண்டு காணும் படைப்பாளிகளின் நூல் வெளியீடு: நூற்றாண்டு காணும் படைப்பாளிகளின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளைப் போற்றும் வகையில் அவர்தம் எழுத்துத்திறன் மற்றும் சமூகப் பங்களிப்பு போன்றவற்றை இளைய தலைமுறையினர் உணர்ந்துகொள்ளும் வகையில் அவர்களது தலைசிறந்த படைப்புகள் தெரிவுசெய்யப்பட்டு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும். இத்திட்டத்தின் வாயிலாக குழந்தைகள், இலக்கிய மற்றும் நாடக ஆர்வலர்கள் பயன்பெறுவர்.

> வயது வந்தோருக்கான புதிய எழுத்தறிவுத் திட்டம்: தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 4.80 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.