கர்நாடகாவில் பிரிவினைவாத அரசியல்: எடியூரப்பா வைத்த வேண்டுகோள்!

கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள்
ஹிஜாப்
அணியக்கூடாது என எழுந்த எதிர்ப்பு அடுத்தடுத்த கட்டங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

ஹிஜாப் அணிந்து செல்ல கர்நாடக மாநில அரசும், உயர் நீதிமன்றமும் தடை விதித்த நிலையில் பல மாணவிகள் தேர்வுகளை எழுதாமல் புறக்கணித்தனர். இதனால் அவர்களது கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது. கல்வி நிலையங்களிலேயே அசாதாரண சூழலை அந்த விவகாரம் ஏற்படுத்தியது.

தற்போது இது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் கோயில்களுக்கு அருகில் உள்ள முஸ்லிம் கடைகளை மூட சொல்லியும், மசூதிகளில் ஒலிபெருக்கிகளை தடை செய்ய சொல்லியும், ஹலால் உணவு பொருட்களை வாங்க வேண்டும் என்றும் இந்துத்துவ அமைப்புகளின் பிரசாரங்கள் அதிகரித்துள்ளன.

கர்நாடக அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பு பேச்சு பேசியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கர்நாடக முன்னாள் முதல்வர்
எடியூரப்பா
, கர்நாடகாவில் நிலவும் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் பசவராஜ் பொம்மை அனைத்து மக்களும் சமம் என்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளார். முதல்வரை சந்திக்கும்போது, இதுபோன்ற பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து முன்னேற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த அறிவுறுத்துவேன்.

அனைத்து சமூகமும் அமைதியுடனும், “இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே தாய்க்கு பிறந்த சகோதரர்கள். அவர்களுக்குள் ஒரு பந்தம் இருக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ விரும்புகிறார்கள். ஆனால் சில குண்டர்கள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

இந்து – இஸ்லாம் பிணைப்பை உடைக்க முயற்சிகள் நடைபெற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கவும், மக்கள் நிம்மதியாக வாழவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று பேசினார்,

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் திட்டமிட்டு தூண்டப்பட்டு வரும் நிலையில் பாஜகவைச் சேர்ந்த அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேச்சு வரவேற்பு பெற்றுள்ளது

கர்நாடகாவில் தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரித்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் இந்த பேச்சு கவனம் ஈர்த்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.