ஜார்க்கண்ட் ரோப் கார்களில் சிக்கிய 40-க்கும் மேற்பட்ட அனைவரும் மீட்பு

தியோகர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோப் கார் விபத்துக்கான மீட்புப் பணி நேற்று முடிவடைந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுத் மலைப் பகுதியில் பாபா வைத்தியநாத் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்வதற்காக 766 மீட்டர் தூரத்துக்கு ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 ரோப் கார்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதிக் கொண்டன. இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். 12 ரோப் கார்களில் 40-க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர்.

இதையடுத்து விமானப் படையின் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை மீட்கும் பணி தொடங்கியது. சவாலான இப்பணியில் நேற்று முன்தினம் சுமார் 30 பேர் மீட்கப்பட்டனர். மாலையில் மீட்புப் பணி நிறுத்தப்பட்டு, நேற்று காலையில் மீண்டும் தொடங்கியது. இதில் மற்றவர்களும் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து தியோகர் துணை ஆணையர் மஞ்சுநாத் பஜந்திரி நேற்று கூறும்போது, “ரோப் கார் விபத்தின் மீட்புப் பணி முடிவடைந்தது. இந்திய விமானப் படை, இந்தோ – திபெத் எல்லை காவல் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் வீரர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின்போது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தவறி விழுந்து இறந்தனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 40-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இதனிடையே ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, இந்த விபத்தை நேற்று வழக்காக எடுத்துக் கொண்டது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கை மீண்டும் ஏப்ரல் 26-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.