ரகசியமாக குடும்பம் நடத்துவதை அறிந்து ஆத்திரம் டாக்டர் கணவர், 2வது மனைவியை நடுரோட்டில் சரமாரி தாக்கி போலீசில் ஒப்படைத்த இளம்பெண்-தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை : தனது 2 குழந்தைகளை தவிக்கவிட்டு வேறு ஒரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்ட டாக்டர் கணவர், அவரது 2வது மனைவியை நடுரோட்டிற்கு இழுத்து வந்து இளம்பெண், அவர்களை சரமாரி தாக்கி போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பானுபிரகாஷ்(40). தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கம்மம் பகுதியை சேர்ந்த சத்தியா(30, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது ₹9 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ₹20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு தற்போது 7 மற்றும் 6 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பானுபிரகாஷிற்கும், அவரது மனைவி சத்தியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை விவாகரத்து செய்ய டாக்டர் பானுபிரகாஷ் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக கோர்ட்டில் விண்ணப்பித்துள்ளாராம். இதற்கான வழக்கு நடந்து வருகிறது.இந்நிலையில், டாக்டர் பானுபிரகாஷ், கடந்த சில ஆண்டுகளாக சூர்யாபேட்டையில் வசிக்கும் வேறு ஒரு இளம்பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டு அவருடன் ரகசியமாக குடும்பம் நடத்தியுள்ளார். இந்த தகவல் சில நாட்களுக்கு முன்பு முதல் மனைவி சத்தியாவுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமடைந்த அவர், உறவினர்கள் உதவியுடன் நேற்று முன்தினம் பானுபிரகாஷ் வசிக்கும் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த பானுபிரகாஷ் மற்றும் அவரது 2வது மனைவி ஆகியோரை நடுரோட்டிற்கு இழுத்து வந்து சரமாரி தாக்கியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இதையடுத்து இருவரையும் சத்தியா போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார்.மேலும் போலீசாரிடம் சத்தியா கூறுகையில், ‘நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் பானுபிரகாஷ் ரகசியமாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனி குடித்தனம் நடத்தி வருகிறார். திருமணத்தின்போது நகை, பணம் வரதட்சணையாக பெற்றது மட்டுமின்றி, எனது பெயரில் இருந்த 2 வீடுகளையும் அன்பாக இருப்பது போல் பேசி அவரது பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார். இப்போது அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நானும், எனது 2குழந்தைகளும் எப்படி வாழ்வது என்று தெரியவில்லை. எனது குழந்தைகளுக்கு தந்தை வேண்டும் என நான் நீதிமன்றத்தில் போராடி வரும் நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய குடும்பம் நடத்தி வருகிறார். எனவே எனக்கு நியாயம் வேண்டும்’ என கதறினார்.இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து பானுபிரகாஷ் மற்றும் அவருடன் இருந்த இளம்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.