பா.ஜனதாவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும்போது காங்கிரசை புறக்கணிப்பது சரியல்ல – சரத்பவார் கருத்து

மும்பை, 
மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி அவர், எதிக்கட்சிகள் ஆளும் முதல்-மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், “நாட்டின் அடிப்படை ஜனநாயகத்திற்கு எதிரான பா.ஜனதாவின் நடவடிக்கைகள் குறித்து, வேதனையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். பா.ஜனதாவை எதிர்த்து போராடவும், நாட்டில் தகுதியான அரசு அமையவும் நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும். இதற்கான வழிமுறைகள் குறித்து, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்த வேண்டும். எனவே, அனைவரின் வசதிக்கு ஏற்ற நேரத்தில் நடைபெறும் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.
இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் நேற்று மும்பையில் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளித்து கூறும்போது, ‘‘பா.ஜனதாவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை தொடங்கும்போது, காங்கிரசையும் உடன் அழைத்து செல்ல வேண்டும். இதில் காங்கிரசை புறக்கணித்து செயல்படுவது சரியாக இருக்காது’’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.