புதுச்சேரி: ஒருநாள் பயணமாக வரும் 24-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகிறார். அரசு நிகழ்வுகள், மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா உட்பட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
வரும் 24-ம் தேதி காலை டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு காலை 9.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். அவரை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு உயரதிகாரிகள் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து அங்கிருந்து சாலை வழியாக புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை வழியாக ஆளுநர் மாளிகை வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார். தொடர்ந்து கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். பல திட்டங்களை துவக்கி வைக்கிறார். பின்னர் கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் இந்திரா காந்தி சிலையருகே உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகிறார். அங்கு எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று டெல்லி புறப்படுகிறார்.
அமித் ஷா வருகை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் கம்பன் கலையரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ரிஷிதா குப்தா தலைமை வகித்தார். இதில் புலனாய்வுத்துறை, காவல்துறை, போக்குவரத்து பிரிவு, வனத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, செய்தி விளம்பரத்துறை, தீயணைப்பு, விமானநிலையம், பிஎஸ்என்எல் உட்பட 22 துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Source link