கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- சசிகலாவிடம் நாளை மீண்டும் விசாரணை

சென்னை:
கொடநாடு கொலை, கொளளை வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினரான விவேக், கொடநாடு பங்களா மானேஜர் நடராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சசிகலாவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது. 
ஐ.ஜி சுதாகர் தலைமையில் 8 பேர் கொண்ட  தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொடநாடு பங்களாவில் நடந்த கொலை- கொள்ளை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார் அதனை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். குறிப்பாக, கொடநாடு எஸ்டேட்டில் இருந்த ஆவணங்கள், சொத்துக்கள், நகைகள் தொடர்பாக சசிகலாவிடம் பல கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 மணி நேரத்திற்கும் மேலாக  நடைபெற்ற விசாரணை மாலையில் நிறைவு பெற்றது. நாளை மீண்டும் சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.