சாலைகளின் வைக்கப்பட்டுள்ள  பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை! மாநகராட்சி

சென்னை: பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை, அபராதம்  விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இதுபோல பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதை பொதுமக்களே நிறுவனங்களோ, அரசியல் கட்சிகளோ கண்டுகொள்ளாமல், போஸ்டர்களை ஒட்டி வரும் நிலையில், மீண்டும்  எப்போதும் போல எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிக்காரச் சென்னை 2.0 என்று கூறிக்கொண்டு சென்னையை உலக தரத்துக்கு மாற்றப்போவதாக கூறிக்கொள்ளும் மாநில அரசும், மாநகராட்சியும், முதலில் சென்னையை சுத்தப்படுத்துவதிலாவது தீவிர கவனம் செலுத்துமா?  என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வண்ண ஓவியங்களால் அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சியின் சார்பில் அனைத்து தெருக்கள் மற்றும் சாலைகளிலும் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயர் பலகைகள் மற்றும் இனி அமைக்கப்பட உள்ள பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் மற்றும் இதர விளம்பரங்களை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959-ன்படி காவல் நிலையங்களில் புகார் அளித்து, சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கி சென்னை மாநகரை சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் தெருக்களின் பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல சாலைகளில் உள்ள பெயர் பலகைகள் காணாமல் போயுள்ளதுடன், பல பலகைகள் மீது இப்போதுவரை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பெயர் பலகையை பொதுமக்கள் பார்க்க முடியாதவாறே உள்ளது. முதலில் காணாமல் போன பெயர் பலகைகளை கண்டுபிடித்து, மீண்டும் வைக்கவும், பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டும் அரசியல் கட்சிகள், நிறுவனங்களை ஸ்பாட்டுக்கு அழைத்து உடனே சுத்தம் செய்ய உத்தரவிட்டு, மீண்டும் அதில் போஸ்டர் ஒட்டப்படாதவாறு கடுமையான நடவடிக்கை எடுக்காதவரையில், மாநகராட்சியின் இதுபோன்ற அறிவிப்புகள் வெற்று வேட்டுகளாகவே பார்க்கப்படும். அதிகாரிகள், மக்களுக்காக உண்மையாக பணி செய்தால் மட்டுமே அரசின் உத்தரவுகள் செயல்பாட்டுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்… ?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.