தமிழ்நாட்டில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை! எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி

சென்னை: தமிழ்நாட்டில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

சமீபத்தில் மயிலாடுதுறை சென்ற கவர்னர் கான்வாய் மீதான தாக்குதல் மற்றும் நெல்லையில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பல்லாவரம் மார்க்கெட் சென்ற புஷ்பவனம் கும்புசாமியின் போன் திருடுபோனது குறித்து புகார் கொடுக்க காவல்நிலையம் சென்றபோது, பாதுகாப்பு கொடுக்க காவலர்கள் இல்லை என்று கூறியது போன்ற நடவடிக்கைகள் காவல்துறை மீதான நன்மதிப்பை குறைக்கும் வகையில் உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது என்றும்,  கமிட்டி போட்டு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை காக்க வேண்டும் எனவும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமழகஅரசு மீது குற்றம் சாட்டி உள்ளார்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மார்க்ரெட் திரேஷா. இவர் நேற்றிரவு சுத்தமல்லி அடுத்த பழவூரில் கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேஷாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் உதவி ஆய்வாளருக்கு இடது கன்னம் இடது கழுத்து மற்றும் வலது மார்பு ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நெல்லையில் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி பெண் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நெல்லை பழவூரில் பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசா, அபராதம் விதித்ததற்காக கழுத்தறுக்கப்பட்ட சம்பவம், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்கு கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையும், காவலர்கள் தங்களை தற்காத்து கொள்ள புதிய யுக்திகளை கையாளுவதற்கு பயிற்சிகளையும் அளிக்க வேண்டும் எனவும், இதற்கும் கமிட்டி போட்டு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை காக்க வேண்டும் எனவும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.