மபி.யில் கைதிகளுக்கு தூக்கு பெற்று தந்தால் வக்கீலுக்கு பரிசா? உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி, விசாரணை

புதுடெல்லி: பாஜ ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகள், கடைகள் சமீபத்தில் இடிக்கப்பட்டன. இந்நிலையில், வழக்குகளில் வெற்றிகரமாக வாதாடி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை  பெற்று தரும் வழக்கறிஞர்களுக்கு இம்மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது. அந்த மாநிலத்தை சேர்ந்த இர்பான் என்பவருக்கு ஒரு வழக்கில் கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். உயர் நீதிமன்றம் அவருடைய மரண தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இர்பான் மனுதாக்கல் செய்தார். அப்போது தான் குற்றவாளிகளுக்கு தண்டனை  பெற்று தந்த வழக்கறிஞர்களுக்கு மாநில அரசு ஊக்கத் தொகை வழங்கும் விவரம் தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்திர பட் மற்றும் பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து கொண்டு விசாரிக்க முடிவு செய்தது. இந்த வழக்கில் ஆஜரான  அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘‘மரண தண்டனை பெற்று தரும் வழக்கறிஞர்களுக்கு ஊக்கத்தொகை தரும் நடைமுறையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்,’’ என்றார். இதையடுத்து, இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி மத்திய பிரதேச அரசின் வழக்கறிஞர் ருக்மினி போப்டேவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.