ஓடிடியில் வெளியாகும் மோகன்லாலின் டுவல்த் மேன்

மோகன்லாலை பொருத்தவரை கடந்த இரண்டு வருடங்களாக தனது படங்களின் ரிலீஸில் பரமபத ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக தியேட்டரில் படங்கள் வெளியாகாத சூழ்நிலையில் அவர் நடித்த திரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியானது. அதைத்தொடர்ந்து நிலைமை ஓரளவு சீரான பின்பு அவர் நடித்து நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரைக்கார் திரைப்படம் தியேட்டரில் வெளியானது.

இதையடுத்து அவரது படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என நினைத்தால் பிருத்விராஜ் டைரக்ஷனில் அவரும் மோகன்லாலும் இணைந்து நடித்த புரோ டாடி திரைப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில்தான் ரிலீசானது. இதைத்தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் மோகன்லால் மீது அதிருப்தியில் இருந்ததால் அதற்கு அடுத்ததாக வெளியான மோகன்லாலின் ஆராட்டு படம் தியேட்டர்களில் வெளியானது.

இதில் தியேட்டர்களில் வெளியான மரைக்கார் மற்றும் ஆராட்டு படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெறத் தவறின. அதேசமயம் ஓடிடியில் வெளியான திரிஷ்யம்-2 மற்றும் புரோ டாடி ஆகிய படங்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்டதுடன் வெற்றி படங்களாகவும் அமைந்தன.

இந்த நிலையில் தற்போது ஜீத்து ஜோசப் டைரக்சனில் மோகன்லால் நடித்துள்ள டுவல்த் மேன் படமும் தியேட்டர்களை ஒதுக்கிவிட்டு ஓடிடி தளத்தில்தான் ரிலீசாக இருக்கிறது என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. அநேகமாக இனிவரும் நாட்களில் தியேட்டருக்கு ஒன்று, ஓடிடிக்கு ஒன்று என மோகன்லாலின் பட ரிலி இப்படித்தான் இருக்கும் போல தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.