லக்கிம்பூர் கேரி வன்முறை: மத்திய அமைச்சர் மகன் ஜாமீன் ரத்து – மீண்டும் சிறையிலடைப்பு

லக்கிம்பூர் வன்முறையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.  

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் சென்ற கார் மோதியது. இந்த சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நடந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர். மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதன் காரணமாகவே விவசாயிகள் உயிரிழந்தனர் என்ற குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

image
இதற்கிடையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆஷிஷ் மிஸ்ரா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 10-ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம், ஆஷ்ஷி மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயிரிழந்த ஒரு விவசாயியின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வு முன் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 4-ம் தேதி வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 18-ம் தேதி அறிவிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த 18-ந் தேதி அறிவித்தது. அதில், லக்கிம்பூர் வன்முறையில் குற்றவாளியான மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது.

image
மேலும், குற்றவாளி ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் காவல் நிலையத்தில் சரண் அடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் ஜாமீனில் இருந்த ஆஷிஷ் மிஸ்ரா மாவட்ட சிறையில் சரணடைந்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிக்கலாம்: எல்லை தாண்டி தாக்க இந்தியா தயங்காது – பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக எச்சரிக்கை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.