விளையாட்டு சக்தி நாட்டின் சக்தியை கூட்டுகிறது- பிரதமர் மோடி

பெங்களூரு:
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. கண்டீரவா ஸ்டேடியத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் துவக்க விழா நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:-
விளையாட்டு சக்தியானது இந்தியாவின் சக்தியை கூட்டுகிறது. விளையாட்டுத் துறையில் பெற்ற அங்கீகாரம் தேசத்தின் மதிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. 
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களின் முகத்தில் பதக்கம் வென்ற மகிழ்ச்சி மட்டுமல்லாமல், தேசத்துக்காக விளையாடிய மகிழ்ச்சியும் இருந்தது.
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களுக்காகவோ, தங்கள் குடும்பத்துக்காகவோ அல்லது பல்கலைக் கழகங்களுக்காகவோ விளையாடுவதாக நினைக்காமல், நாட்டுக்காக விளையாடுவதாக நினைத்து விளையாடுங்கள்.
வெற்றியின் முதல் மந்திரமானது குழுவாக இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற உணர்வில் உள்ளது. இதை நாம் விளையாட்டிலிருந்து கற்றுக்கொள்கிறோம். இந்த உத்வேகம் உங்கள் வாழ்க்கையில் முன்னேறவும், எதிர்காலத்தில் பதக்கங்களை வெல்லவும் உதவும். 
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.