'Secular' என்ற வார்த்தை பயன்பாடே இந்தியாவில் சாதி, மத அரசியல் மோதலுக்கு காரணம்: அண்ணாமலை அடுக்கிய ‘வரலாறு’

சென்னை: “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எப்போது “Secular” என்ற வார்த்தையை 1977-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் கொண்டு வந்தாரோ, அன்றிலிருந்து சாதி அரசியலும், மத அரசியலும் இந்தியாவில் தழைத்தோங்கிவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “உண்மையான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எடுத்து பார்க்கின்றபோது, உண்மையாக அச்சடிக்கப்பட்ட அந்தப் புத்தகம், டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ளது. அது நாம் பேப்பரில் படிக்கும் புத்தகத்தில் படிக்கும் அரசியலமைப்புச் சட்டம் போல இருக்காது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் என்பது அதன் ஒவ்வொரு பக்கத்திலும்கூட இந்தியாவின் இறையாண்மையை வெளிபடுத்தியிருப்பார்கள். 1947 ஆகஸ்ட் 15 சுதந்திரம் கிடைத்து, 1950 ஜனவரி 26 இந்திய அரசியலமைப்புச் சட்டம் வந்தபோது, நம் இந்தியாவின் பாரம்பரியத்தை அந்த புத்தகத்தில் வெளிப்படுத்தியிருப்பார்கள்.

அண்மையில் நான் டெல்லி சென்றிருந்தபோது, National Gallery of Modern Arts என்று அந்த உண்மையான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு மணி நேரம் புரட்டிப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்து. ஒரிஜினல் பிரின்ட். இதில் மிகுந்த ஆச்சரியமான விசயம் என்றால், அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்கூட ஒரு சின்னதொரு வரைபடத்தை வரைந்திருக்கின்றனர். அந்தப் படங்கள் இந்தியாவை பிரதிபலிப்பவை.

இந்தியாவை இதுவரை யாரெல்லாம் ஆட்சி செய்தனர், எந்த மாதிரியான மன்னர் ஆட்சியெல்லாம் இந்தியாவில் நடந்துள்ளது அவையெல்லாம் தொடக்கப் பக்கத்தில் நீங்கள் காணலாம். அதேபோல மகாபாரதம், பகவத் கீதையில் கிருஷ்ணர், அர்ஜுனருக்கு கொடுத்த உபதேசம் அதுவொரு பக்கத்தில் வரையப்பட்டுள்ளது. அதன்பின்னர் நமது இமயமலை, இந்தியாவில் இருக்கக்கூடிய தொன்மை, பழமையான அனைத்து விசயங்களும்கூட அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும்கூட அதனை வரைந்துள்ளனர். காரணம், இந்தியா என்ற நாடு எப்படி உருவானது, எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை, அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரிஜினல் புத்தகத்தில் காணலாம்.

ஆனால், இப்போதெல்லாம் அரசியலமைப்புச் சட்டத்தை பிரின்ட் செய்து 100 ரூபாய், 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பார்க்கும்போது வெள்ளை பேப்பரில் எழுத்து மட்டும்தான் தெரிகிறது. இதனால், நம் நாட்டில் என்ன நினைத்துக் கொள்கிறோம் என்றால், இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்று நினைத்துக் கொள்கின்றோம். அரசியலமைப்புச் சட்டம் என்பது அந்த வெள்ளைப் பேப்பரில் இருக்கும் எழுத்தும் இருக்க வேண்டும். அம்பேத்கர் ஐயா நமக்கு கொடுத்துள்ள வார்த்தைகள் எல்லாம் பொன்னான வார்த்தைகள். அதைத்தாண்டி உருவாக்கப்பட்டதன் நோக்கம்,

உண்மையான அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் வரைபடமாக வைத்துள்ளனர். அர்ஜுனனுக்கு கிடைத்த உபதேசத்திலிருந்து, மகாபாரதத்திலிருந்து, இந்தியாவின் பன்முகத்தன்மை எல்லாமே ஒவ்வொரு பக்கத்தில் உள்ளன. அதைப் பார்க்கும்போது மிரண்டு போனேன். அந்த ஒரிஜினல் பதிப்பை காண்பதற்கு இத்தனைநாள் வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

ஆனால், அதை எல்லாமே மறைக்கப்பட்டு, வெறும் பேப்பர்தான் அரசியலமைப்புச் சட்டம் என மாற்றிவிட்டோம். 1977 வரை “Secular” என்ற வார்த்தையே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கிடையாது. அதாவது, “Secular” என்ற வார்த்தையை பயன்படுத்தாமலேயே அனைத்து சாதி, மதமெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லாமல், ஒன்றாகத்தான் இருந்தோம். எமர்ஜென்சி காலகட்டத்தில் இந்திரா காந்தி 42-வது சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து, “Secular” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, அப்போதிலிருந்து “Secular” என்றால் என்ன என்ற குழப்பம் அனைவருக்கும் இருந்து வருகிறது.

200 ஆண்டுகளாக எப்போதும் “Secular”-ஆக இருந்த நாடுதான் இது. ஆனால், இந்திரா காந்தி எப்போது “Secular” என்ற வார்த்தையை 1977-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் கொண்டு வந்தாரோ, அன்றிலிருந்து சாதி அரசியலும், மத அரசியலும் இந்தியாவில் தழைத்தோங்கிவிட்டது.

பாஜக மதத்தை வைத்து எப்போது அரசியல் செய்யாது என்பது, பாஜக கட்சியின் உறுப்பினர் அட்டையில் 3-வதாக உள்ளது. தீண்டாணை என்பதை எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். கீழ் சாதி, மேல்சாதி என்ற பாகுபாட்டை யார் உருவாக்கினார்களோ அதையே உடைக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒரு கட்சி பாஜக. ஆனால், இந்த நிலை எல்லாமே 1977-க்கு பின்னர் மாறி, இந்தியா முழுவதுமே குடும்ப ஆட்சிகள்தான் என்ற நிலை உருவாகிவிட்டது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.