ஆப்கனை போல் உக்ரைன்: ஜெய்சங்கர் வேதனை!

உக்ரைன்
மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளும் உக்ரைனைத் தாக்கி வருகின்றன. சர்வதேச கண்டனம், எதிர்ப்பு என எதையும் கண்டு கொள்ளாமல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இரு தரப்புக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித ஆக்கப்பூர்வமாக முடிவுகளும் எட்டப்படவில்லை. இதனிடையே, மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ள ரஷ்யா, அதற்கு விடுதலை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்து போன்று தான் உக்ரைனில் நடந்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வேதனை தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் 7ஆவது ரைசினா சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். போலந்து, ஸ்லோவேனியா உள்ளிட்ட 90 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ஜனநாயக மறுபரிசீலனை, பருவநிலை மாற்றத்தை கையாளுதல் உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த மாநாட்டின் 2ஆவது மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. அதில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது என்பது அனைவருக்குமே தெரியும். அந்நாட்டு மக்கள் அங்கு என்ன பாடுபட்டனர் என்பதை யாரும் மறக்கவில்லை. அதைப் போலத்தான் தற்போதைய உக்ரைன் நிலையும். இது ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு அறை கூவலாகக் கூட இருக்கலாம்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நிறுத்தப்பட வேண்டும். போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். உக்ரைனில் நடந்து வரும்போரை உடனடியாக நிறுத்துவதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும். போரை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முன்னதாக, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க விழாவில் பேசிய, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரே வர்த்தக பாதையை பயன்படுத்துவதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.