தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி…

சென்னை: தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு தமிழக சட்டசபையில் இன்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் தேரினை மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது இந்நிலையில், மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

தேரினை இழுத்து வரும் போது அப்பகுதியில் தண்ணீர் இருந்ததால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்படதாக கூறப்படுகிறது. மேலும், களிமேட்டில் தேர் விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு செல்கிறார்.

மேலும்,  தஞ்சாவூருக்குச் சென்று காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளேன் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனது சக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.