மகன் சடலத்தை கொண்டு செல்ல ரூ. 20 ஆயிரம் கட்டணம் கேட்டு அடாவடி : 6 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிரடி கைது

திருமலை: இறந்த மகனின் சடலத்தை ஊருக்கு கொண்டு செல்ல முயன்ற தொழிலாளியிடம் ரூ.20 ஆயிரம் கட்டணம் கேட்டு அடாவடி செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள், குறைந்த கட்டணத்தில் எடுத்து செல்ல முயன்றவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து 6 ஆம்புலன்ஸ் டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் ராஜம்பேட்டை அடுத்த சித்வேல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மலு. காவலாளி. இவரது 9 வயது மகனான ஜெயசிவாவுக்கு சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான். ஜெயசிவாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நரசிம்மலு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அணுகினார். அவர்கள் 75 கிமீ தூரத்துக்கு உடலை கொண்டு செல்ல ₹20 ஆயிரம் கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த நரசிம்மலு, ‘‘கூலி வேலை செய்யும் என்னால் அவ்வளவு பணம் தர இயலாது’’ என கூறினார். அதற்கு பிறகும், கட்டணம் குறைக்க இயலாது என ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கூறிவிட்டனர். அப்போது ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர், நரசிம்மலுவின் நிலையை பார்த்து ₹8 ஆயிரத்திற்கு அழைத்து செல்ல முன் வந்தார். ஆனால் அந்த டிரைவரிடம், ‘மருத்துவமனைக்குள் வந்தால் உயிருடன் செல்ல மாட்டாய்’ என மிரட்டி மற்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள் விரட்டியுள்ளனர். இதனால் நரசிம்மலு தவித்தார். பின்னர் கிராமத்தில் உள்ள சிலருக்கு தெரிவித்து வரவழைத்தார். பின்னர் தனது மகன் சடலத்தை பைக்கின் பின்னால் அமர்த்தி கொண்டு ஊருக்கு சென்றார். இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் சிலர், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதுகுறித்து மாநில சுகாதார துறை அமைச்சர் விடதல ரஜினி, குண்டூரில் நிருபர்களிடம் கூறுகையில், ‘சடலங்களை வைத்து வியாபாரம் செய்யும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அனைத்து மருத்துவமனைகளிலும் தனியார் ஆம்புலன்ஸ்கள் ஒழுங்குபடுத்தப்படும்’ என தெரிவித்தார்.மேலும் இதுதொடர்பாக திருப்பதி கலெக்டர் வெங்கட்ரமணா உத்தரவின்படி ஆர்டிஓ கனகநரசா தலைமையில் விசாரணை நடந்தது. அலிபிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பின்னர், குறைந்த கட்டணத்தில் உதவ வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராகவேந்திராவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களான நரசிம்மலு, கிருஷ்ணமூர்த்தி, தாமோதர் சுரேஷ், பிரபு, சேகர், துரைராஜ் ஆகிய 6 பேரை நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் மீது சடலத்தை கொண்டு செல்லவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.