2 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிப்பு- கொரோனா தினசரி பாதிப்பு 2,927 ஆக உயர்வு

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 நாட்களாக சற்று குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.

கடந்த 24-ந்தேதி பாதிப்பு 2,593 ஆக இருந்தது. அதன்பிறகு 2,541, 2,483 ஆக குறைந்த நிலையில், இன்று பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 65 ஆயிரத்து 496 ஆக உயர்ந்தது.

டெல்லியில் புதிதாக 1,204 பேர், அரியானாவில் 517 பேர், கேரளாவில் 255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 153 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில் மும்பையில் மட்டும் 102 பேர் அடங்குவர். இது அங்கு கடந்த 57 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 26 மரணங்கள் மற்றும் நேற்று மகாராஷ்டிராவில் 4, டெல்லி, மிசோரத்தில் தலா ஒருவர் என மேலும் 32 பேர் இறந்துள்ளனர்.  இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,23,654 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2,252 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 25 ஆயிரத்து 563 ஆக உயர்ந்தது.

தற்போது 16,279 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 643 அதிகம் ஆகும்.

இதுவரை 188 கோடியே 19 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. இதில் நேற்று 21,97,082 டோஸ்கள் அடங்கும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி 83.59 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 5,05,065 மாதிரிகள் அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.