அசாமில் 7 புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

திப்ருகர்:
அசாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் நடைபெறும் அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியின் போது கல்வித்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 500 கோடி மதிப்பிலான கால்நடை மருத்துவக் கல்லூரி, பட்டக்கல்லூரி, மற்றும் விவசாயக் கல்லூரி ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
அதன்பின்னர், பிற்பகல் திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரிக்கு சென்ற பிரதமர், திப்ருகர் புற்றுநோய் மருத்துவமனையை பார்வையிட்டு கல்வெட்டை திறந்து வைத்தார். அதன்பின்னர் திப்ருகர் கானிக்கர் திடலில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடி, தொழிலதிபர் ரத்தன் டாடாவுடன் இணைந்து 7 புற்றுநோய் மருத்துவமனைகளை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அத்துடன், 7 புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக, நாட்டுப்புற கலைஞர்களின் பிரமாண்டமான பாரம்பரிய நாட்டுப்புற நடனம் நடைபெற்றது. நடனத்தை கண்டுகளித்த பிரதமர் மோடி, எழுந்து நின்று கைதட்டி கலைஞர்களை ஊக்குவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.