நெல்லை: “எங்களால் பராமரிக்க இயலவில்லை..!" – 90 வயது மூதாட்டியை உயிரோடு எரித்த பேத்திகள் கைது!

நெல்லை பழையபேட்டை பகுதியில் ஆதாம் நகர் குடியிருப்பு உள்ளது. அந்தப் பகுதியில் மாநகராட்சியின் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் அந்தப் பகுதியில் ராட்சத குழாய்கள் போட்டு வைக்கப்பட்டதும், பொதுமக்கள் குப்பை கொட்டும் பகுதியாகவும் மாறியுள்ளது.

எரித்துக் கொல்லப்பட்ட பாட்டி சுப்பம்மாள்

அந்த இடத்தின் அருகே சுடுகாடு அமைந்திருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு மதிய நேரத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தபோது ஆட்டோவில் வந்த சிலர் அங்கு ஒரு மூதாட்டியைக் கொண்டுவந்து எரித்து கொலை செய்துவிட்டுச் சென்றதாகத் தகவல் பரவியது. உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் அதை செல்போனில் வீடியோவாக எடுத்ததுடன் பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் பாதி எரிந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் உயிரற்ற உடலை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் பின்னர் அந்தப் பகுதியில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அங்கு ஆட்டோ வந்தது தெரியவந்ததால் ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆட்டோ டிரைவர்கள் அளித்த தகவல் மற்றும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து மூதாட்டியை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவரை கண்டுபிடித்து விசாரித்ததில், பழையபேட்டையை சேர்ந்த மாரியம்மாள், அவரது சகோதரி மேரி ஆகியோர் அவர்களின் பாட்டியுடன் அங்கு வந்த விவரத்தைத் தெரிவித்தார்.

அதையடுத்து, போலீஸார் மாரியம்மாள் மற்றும் மேரியை பிடித்து விசாரித்தபோது, பாட்டி சுப்பம்மாளை அங்கு அழைத்து வந்து அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததை ஒப்புக் கொண்டனர். பாட்டி சுப்பம்மாளின் மூத்த மகள்களான தங்களது பராமரிப்பில் பாட்டி இருந்ததாகவும், அவரைப் பராமரிக்க முடியாமல் திணறியதால் எரித்துக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மேரி, மாரியம்மாள்

சுடுகாட்டுப் பகுதியில் கொண்டு சென்று எரித்துவிட்டால் யாருக்கும் தெரியாமல் போய்விடும் என்பதற்காக அந்த இடத்தைத் தேர்வு செய்ததாக கைது செய்யப்பட்ட இருவரும் தெரிவித்துள்ளனர். பராமரிக்க முடியாததால் பாட்டியை பேத்திகளே உயிருடன் எரித்து கொலை செய்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.