பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் புகார்- மந்திரி மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு

ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் மந்திரி மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் ஜோஷி மீது டெல்லி காவல்துறையிடம் 23 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஃபேஸ்புக் மூலம் மந்திரியின் மகனை ஜெய்ப்பூரில் சந்தித்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். 
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி 8ந் தேதி ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதோபூருக்கு தன்னை அழைத்துச் சென்ற ரோஹித் ஜோஷி, குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்ததாக அந்த பெண் கூறியுள்ளார். 
மறுநாள் காலையில் தான் எழுந்தபோது நிர்வாணமாக இருந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும்  தன்னிடம் ரோஹித் காட்டியதாகவும், பாதிக்கப்பட்ட அந்த பெண் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து கணவன் மனைவி என்று பெயர் பதிவு செய்த ஹோட்டலில் தங்க வைத்ததாகவும், என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் கூறிய பெண்,  கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை பல சந்தர்ப்பங்களில் டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் வைத்து  மந்திரி மகன் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரோஹித் ஜோஷி மீது கற்பழிப்பு, போதை மருந்துகளால் காயப்படுத்துதல், கருச்சிதைவு ஏற்படுத்துதல்,  இயற்கைக்கு மாறான குற்றங்கள், கிரிமினல் மிரட்டல் மற்றும் மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வடக்கு டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  
இந்த வழக்கு குறித்து ராஜஸ்தான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் மேலும் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் டெல்லி மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
மந்திரி மகன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்துள்ள ராஜஸ்தானை சேர்ந்த மற்றொரு மந்திரி பிரமோத் ஜெயின், அரசியலில் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் சகஜமானது என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.