பள்ளி மாணவி பலாத்காரம் ஆசிரியராக பணியாற்றிய மார்க்சிஸ்ட் பிரமுகர் கைது: நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை சீரழித்ததாக புகார்

திருவனந்தபுரம்: கேரளாவில் மலப்புரத்தில்  பணியில் இருந்தபோது 100க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்ததாக  கூறப்பட்ட புகாரில், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரும், சிபிஎம் கவுன்சிலருமான  சசிகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்,  மலப்புரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (57). மலப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு  உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரிந்த இவர், கடந்த மார்ச் மாதம் ஓய்வு  பெற்றார். மலப்புரம் நகரசபையில் மூன்று முறை சிபிஎம் கவுன்சிலராகவும்  இருந்துள்ளார். இந்நிலையில், ஆசிரியர்  சசிகுமார் பணியில் இருந்தபோது 100க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம்  செய்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில்  தகவல் வெளியானது  பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இது  தொடர்பாக போலீசில் எந்த புகாரும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில்,  கடந்த சில தினங்களுக்கு  முன் ஆசிரியர் சசிகுமார் தன்னை பலாத்காரம்  செய்ததாக கூறி ஒரு மாணவி மலப்புரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து,  அவர் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து  அறிந்த சசிகுமார் தலைமறைவானார். இதற்கிடையே அவர்  கவுன்சிலர் பதவியை  ராஜினாமா செய்தார். மேலும் கட்சியிலிருந்து அவரை சிபிஎம் சஸ்பெண்ட்  செய்தது.இந்நிலையில், வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியிலுள்ள ஒரு  சுற்றுலா விடுதியில் சசிகுமார் தலைமறைவாக இருப்பதாக மலப்புரம் போலீசுக்கு  தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். சசிகுமாரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே அவர் எத்தனை மாணவிகளை பலாத்காரம் செய்தார் என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.