10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 1.18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை – பள்ளிக்கல்வித் துறை தகவல்

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1.18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு எழுத 26.5 லட்சம் மாணவ, மாணவிகள் தகுதிபெற்றனர்.

ஆனால், பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 32 ஆயிரம் பேர் வரை தேர்வில் பங்கேற்கவில்லை. அதேபோல், பிளஸ் 1 வகுப்பில் 43 ஆயிரம் பேரும், 10-ம் வகுப்பில் 42 ஆயிரம் பேரும் தேர்வு எழுத வரவில்லை.

குடும்பப் பொருளாதார சிக்கல்

அதன்படி ஒட்டுமொத்தமாக 1.18 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளாமல் இருப்பது தெரியவந்தது. இதற்கான காரணம் குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குடும்பப் பொருளாதார சிக்கல் காரணமாக மாணவர்கள் பலர் இடைநின்றது ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

மாணவர்களின் கணிசமானவர்கள் பள்ளிப்படிப்பைக் கைவிட்டு ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற தொழிற்படிப்புகளில் சேர்ந்துவிட்டனர். சிலர் உடல் பாதிப்பு காரணமாக தேர்வைச் சந்திக்க முடியாத நிலை உள்ளது. எனினும், கரோனாவுக்குப் பின்னர் பள்ளி திரும்பிய மாணவர்கள் பலர் குடும்பப் பொருளாதாரம் காரணமாக வேலைக்கு சென்றுள்ளனர். இத்தகைய இடைநிற்றலை தவிர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.