ஜூன் 24 ஆம் தேதி நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் மற்றும் சீன அதிபர் ஆகியோருடன் பிரதமர் மோடி காணொலியில் பேச்சு.!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜூன் 24 ஆம் தேதி நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடி காணொலியில் பேச்சு நடத்த உள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாடு சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஜூன் 24ந் தேதி காணொலி வாயிலாக நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி உரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர் புதினுடன் மோடி உரையாடவும் இந்த மாநாடு வழிவகுக்கிறது. உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி வருகிறது. இந்த மாநாட்டின்போதும் அதிபர் புதினை மோடி மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைக் குறித்து வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய பாதுகாப்பு என்ற சீனாவின் கொள்கைக்கு அவர் பிரிக்ஸ் நாடுகளின் ஆதரவை இந்த மாநாடு மூலம் கோர உள்ளார்.

இந்தியாவுடன் தொடர்ந்து எல்லைப் பிரச்சினை நீடிக்கும் போதும் சீனா முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவும் சீனாவும் எல்லையில் கொண்ட நிலைப்பாடு பல சுற்றுப் பேச்சுகளுக்குப் பிறகும் நீடிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.