புவனேஸ்வர்: ஒடிசாவில் புதிதாக 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர். ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களையும் ராஜினாமா செய்யும்படி நவீன் பட்நாயக் நேற்று முன்தினம் திடீரென உத்தரவிட்டார். அதன்படி, 20 அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கணேஷி லாலுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், சபாநாயகர் சூர்ஜ்ய நாராயண் பாட்ரோவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நேற்று காலை பழைய தலைமை செயலகமான லோக் சேவ பவனில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் விழா நடந்தது. இதில், எம்எல்ஏ.க்கள் ஜெகநாத் சரகா, நிரஞ்சன் பூஜாரி, ஆர்பி ஸ்வைன் உட்பட 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் கணேஷி லால் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். இதில், 13 பேருக்கு கேபினட் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் பிரமிளா மல்லிக், உஷா தேவி மற்றும் துகுனி சாஹு ஆகிய மூன்று பெண்கள் இடம் பெற்றுள்ளனர். நவீன் அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 12 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 9 பேர் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். 5 மூத்த எம்எல்ஏ.க்களுக்கும், புது முகங்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
