முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கு சிறப்பு கவுன்சிலிங் கோரிய மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி,

2021 மற்றும் 2022ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிந்த பிறகு 1,456 இடங்கள் காலியாக இருப்பதாகவும் அந்த காலி இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி மாணவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இளநிலை மருத்துவ படிப்பில், எந்த ஒரு இடமும் வீணாகிவிடக் கூடாது எனக்கூறி சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படும் என்று மருத்துவ கலந்தாய்வுக் குழு முடிவு எடுத்தது.

அதே நடைமுறையை பின்பற்றி முதுநிலை மருத்துவ படிப்புகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப எம்சிசிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் வாக்குமூலத்தில் காலியாக உள்ள 1,456 இடங்களும் 1,117 இடங்கள் மருத்துவ துணை படிப்பு இடங்கள் என்று கூறியுள்ளது. பல முறை கலந்தாய்வு நடத்தியும் மாணவர்கள் இந்த இடங்களை தேர்வு செய்யவில்லை என்று தெரிவித்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அந்த தீர்ப்பில், ‘முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கு சிறப்பு கவுன்சிலிங் நடத்த உத்தரவிட்டால் அது பொது சுகாதாரத்தை பாதிக்கும் என்றும் மருத்துவ கல்வியின் தரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என கூறினர்.

எஞ்சியுள்ள 1,456 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த தேவையில்லை என அரசு எடுத்த முடிவு தன்னிச்சையானது அல்ல. காலதாமதமாக கவுன்சிலிங் நடத்தி காலியான இடத்தை நிரப்பினால் மருத்துவ படிப்பின் தரம் பாதிக்கும். எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்,’என்று தெரிவித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.