உறவுக்கார இளம்பெண்ணின் எரியும் சிதையில் குதித்து இளைஞன் தற்கொலை

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் சாஹர் மாநிலம் மஞ்குவா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி என்கிற ப்ரீத்தி டங்கி (21). இவர் கடந்த வியாழக்கிழமை மாலை வயல்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, வயல்பகுதியில் இருந்த கிணற்றுக்குள் எதிர்பாராமல் விழுந்துள்ளார்.

ஜோதி மாயமானது குறித்து சந்தேகமடைந்த பெற்றோர் தேடியதில் அவர் வயல் பகுதியில் உள்ள கிணற்றுக்குள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடலை மீட்ட குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கு செய்து கிராமத்தில் உள்ள இடுகாட்டிற்கு ஜோதியின் உடலை கொண்டு சென்றனர்.

இதற்கிடையில், ஜோதியின் மரணம் குறித்து தகவலறிந்த அவரின் உறவுக்கார இளைஞனான கரண் (21) இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தான் வசிக்கும் பகுதியில் இருந்து ஜோதியின் கிராமத்திற்கு 430 கிலோமீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இடுகாட்டில் ஜோதியின் உடலுக்கு அவரின் தந்தை எரியூட்டினார். அப்போது, இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கரண் ஜோதியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தானும் அந்த எரியும் சிதையிலேயே குதித்தார்.

இதை கண்ட அங்கிருந்தவர்கள் சிதையில் குதித்த கரணை நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டனர். எரியும் சிதையில் குதித்ததில் தீக்காயங்களுடன் படுகாயமடைந்த கரணை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், படுகாயமடைந்த கரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உறவுக்கார பெண்ணின் எரியும் சிதையி குதித்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.