தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாக பணிபுரிந்து வரும் ஷாலினி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நான், நீலகிரி மாவட்டம் கேரள எல்லையில் உள்ள சேரம்பாடி ஊரைச் சேர்ந்தவர். அங்கு 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்தேன். பின்னர் எனது ஊரில், 11 மற்றும் 12-ம் வகுப்புகள் தமிழ் வழியில் இல்லாததால் அருகிலுள்ள கேரளாவில் ஆங்கில வழிக்கல்வியில் படித்தேன்.

பின்னர் குரூப்-2 தேர்வெழுதி, தமிழ் வழியில் படித்ததிற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில், சென்னை புழல் சிறையில் உதவி சிறைத் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறேன். மேலும், சிறந்த பணி வாய்ப்பை பெறுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு குரூப் -1 தேர்வு எழுதினேன். அப்போது தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க, தமிழக அரசின் புதிய சட்டதிருத்தத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் கேட்கப்பட்டது.

அரசின் இந்த சட்டத்திருத்தம் எனது அடிப்படை உரிமையை பாதிப்பதாக உள்ளது. எனவே, அரசின் புதிய சட்டத் திருத்தம் செல்லாது என அறிவித்து, அந்த சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா மற்றும் கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, பணிக்கான தகுதியுடைய படிப்பை, அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் தான் படித்திருக்க வேண்டும். அப்போதுதான் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியும்.

மேலும், ஏற்கெனவே இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.