மின் வாரியத்தில் மீண்டும் பராமரிப்பு பணிகள் தொடக்கம்: மின்தடை தவிர்க்கப்படும் என தகவல்

சென்னை: மின் வாரியத்தில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், அடிக்கடி மின்தடை ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றுமின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக மின் வாரியம், துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை அனுப்பி, மின் மாற்றி,மின் விநியோகப் பெட்டி உதவியுடன் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. மின் வாரிய சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கும். அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில், குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்த விவரம் பத்திரிகைகள், குறுஞ்செய்திகள் மூலமாக நுகர்வோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்,பள்ளித் தேர்வுகள் உள்ளிட்டவை காரணமாக அந்த 2 மாதங்களும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மின் சாதனங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின்தடை ஏற்பட்டது.

இந்நிலையில், 2 மாதங்களுக்குப் பிறகு மின் வாரிய கருவிகளில் பராமரிப்பு பணிகளை மின் வாரியம் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.