மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் மனைவிக்காக வாக்காளர் காலில் விழுந்த கணவர்: நூதன பிரசாரத்தால் பரபரப்பு

போபால்: மத்தியபிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் தனது மனைவி வெற்ற பெறவேண்டும் என்பதற்காக வாக்காளர்களின் காலில் விழுந்து கணவர் வாக்கு சேகரித்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக வரும்  25ம் தேதி தொடங்கி ஜூலை 8ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குச் சீட்டுகள்  முறையில் நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் தங்கள் பகுதி வாக்காளர்களை கவர பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். குராரியா லஷ்கர்பூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுசீலா பாய்க்கு ஆதரவாக அவரது கணவர் நூதன முறையில் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று வேட்பாளர் சுசீலா பாயும், அவரது கணவரும் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தனர். இருவரும் வீடுவீடாக சென்று வாக்காளர்களின் காலடியில் விழுந்து, தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டனர். மக்களும் கண்டிப்பாக அவர்களுக்கு வாக்களிப்பதாக உறுதியளித்தனர். இதுகுறித்து வேட்பாளர் சுசீலா பாயின் கணவர் கூறுகையில், ‘எனது மனைவி தேர்தலில் வெற்றிபெற்றால் எங்களது கிராமத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களிடம் ஆசி கேட்டு, அவர்களின் காலில் விழுந்து வாக்கு கேட்கிறோம்’ என்றார். இருப்பினும், இவர்களது தேர்தல் பிரசார யுக்தி உள்ளூர் மக்களிடையே விவாதப் பொருளாகவே மாறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.