திருப்புவனம் அருகே எஸ்ஐயை தாக்கி மண்டையை உடைத்த போலீஸ்காரர் கைது

திருப்புவனம்: திருப்புவனம் அருகே எஸ்ஐயை தாக்கி மண்டையை உடைத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழப்பூவந்தியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (32).  இவர் இளையான்குடி காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பூவந்தி கடை வீதியில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்த பூவந்தி எஸ்ஐ பரமசிவம், சம்பவ இடத்திற்கு  சென்று முத்துப்பாண்டியை கண்டித்து வீட்டிற்கு அனுப்பினார். நேற்று அதிகாலை பூவந்தி சோதனைச்சாவடியில் எஸ்ஐ பரமசிவம் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த முத்துப்பாண்டி தகராறு செய்துள்ளார். மேலும் பரமசிவத்தை தாக்கி அவரது மண்டையை உடைத்தார். காயமடைந்த பரமசிவம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து  பூவந்தி போலீசார் வழக்கு பதிந்து முத்துப்பாண்டியை கைது செய்தனர்.முத்துப்பாண்டி ஏற்கனவே குடிபோதையில் உயர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு சமீபத்தில் பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பணிக்கு செல்லாமல் உள்ளதால் அவருக்கு உயரதிகாரிகள் ஆப்சென்ட் போட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.