ஆறு மாதங்களுக்குள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால் பதவி விலக தயார்: பிரதமர் தெரிவிப்பு

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறுவது போன்று ஆறு மாதங்களுக்குள் வீழ்ச்சிக்கண்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியுமென்றால், பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று (05) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரை ஆற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தற்போது காணப்படும் சவாலான பொருளாதாரத்தை ஒரே இரவில் மீட்டெடுக்க முடியாது எனவும் அதற்கு பல வருடங்கள் ஆகும் எனவும் தெரிவித்தார்.

தாம் அடிக்கடி கூறுவது போன்று பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டம் திஸாநாயக்கவிடம் இருந்தால் அதனை ஜனாதிபதியிடம் முன்வைக்க முடியும் எனவும் அதற்கு அவர் தயாராக இல்லை என்றால் பாராளுமன்றத்தில் குறித்த திட்டத்தை முன்வைக்க முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய நெருக்கடியை ஆறு மாதங்களுக்குள் அவர் தீர்க்க முடிந்தால் அது பாராட்டுக்குரிய முயற்சியாக இருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.