பழ வியாபாரியின் வேடிக்கையான வியாபார உத்தி.. விழுந்து விழுந்து சிரிக்கும் இணையவாசிகள்!

சந்தைகளில், சாலைகளில் காய்கறி பழங்கள் விற்கும் வியாபாரிகள், விதவிதமாக பேசி, பாடல்களாக பாடி மக்களை கவர்ந்து வியாபாரம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் பழ வியாபாரி ஒருவர் தன் கடையில் இருக்கும் பழங்களை விற்க வித்தியாசமான, வேடிக்கையான செயல்களை செய்த வீடியோ ரெடிட் தளத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அந்த வீடியோவில், அடையாளம் தெரியாத பழ வியாபாரி ஒருவர், தள்ளுவண்டியில் பழங்களை வைத்து வேடிக்கையான முறையில் விற்பதைக் காணலாம்.
ஒவ்வொரு முறையும் பழங்களை வெட்டி காண்பிக்கும் போது அந்த வியாபாரி, குறும்பாகவும், குசும்பாகவும் தனது பாவனைகளை மாற்றி விற்பனையை மேற்கொள்கிறார்.

அது, அவ்வழியே செல்லும் மக்களிடையே அட போட வைக்கிறது. தர்பூசணியை வெட்டி அதில் முகத்தை மறைத்து வைத்தும், பப்பாளி டிசைனாக வெட்டி அதை மேஜிக் செய்வது போல காட்டுவதும் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்த ரெடிட் பயணர் ஒருவர், ”இவரைப் போன்று நான் பழம் வாங்கும் வியாபாரியும் பழங்கள் மீது ஆர்வமாக இருக்காவிடில் அதனை வாங்க மாட்டேன்” எனக் கூறியிருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பழம் விற்பவரின் செயல் பலரிடையே சிரிப்பை உண்டாக்கினாலும் சிலரை பயமுறுத்தவும் செய்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.