தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று கோவை, நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கி,பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்திலும் பரவலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக கோவை மாநகர் மற்றும் நகர புகார் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டம் – வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.