சாத்தூர்: ஆபாசமாக பேசும் ஆசிரியரை கைது செய்யுங்கள் என முற்றுகை போராட்டம்

பள்ளி மாணவ, மாணவிகளை தவறாக பேசிவரும் ஆசிரியரை கைது செய்யக்கோரி கிராம பொதுமக்கள் மாணவ, மாணவிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புதுசூரங்குடி, நடுச்சூரங்குடி, அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
image
இந்நிலையில் இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் தாமோதரன், அந்தப் பள்ளியில் பயின்று வரும் பள்ளி மாணவ, மாணவிகளை ஆபாச வார்த்தையில் பேசுவதும் ஒருமையில் திட்டுவதும் என தொடர்ந்து பாலியல் ரீதியாக மாணவிகளிடம் தொந்தரவு கொடுத்து வருவதாக மாணவ, மாணவிகள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து மிகுந்த மன உளைச்சல் அடைந்த பள்ளி மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று பள்ளியில் ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
image
இதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் செல்ல பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.