விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி நேற்று இரவு கர்நாடகா அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது செஞ்சி திண்டிவனம் சாலையில், திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, கர்நாடகா அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
பின்பு தனியார் பேருந்து அருகில் இருந்த போர்வெல் கடை மீது மோதி நின்றது. இதனால் கடையின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து செஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.