விஜயபுரா பெண் வேடத்திலிருந்த இளைஞர், ஆலமட்டி அணை அருகில் உள்ள, லால் பகதுார் சாஸ்திரி அணையில் நுழைய முயற்சித்து, போலீசாரிடம் சிக்கினார்.விஜயபுராவின், ஆலமட்டி அருகில் உள்ள லால்பகதுார் சாஸ்திரி அணை பகுதியில், நேற்று அதிகாலை படுதா அணிந்த பெண் ஒருவர், நுழைய முயற்சித்தார். அணை நுழைவாயிலில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்து, ‘இவ்வளவு காலையில் அணையை பார்க்க, அனுமதி அளிக்கப்படாது’ என்றனர்.அப்போது நடந்த உரையாடலில், படுதா அணிந்திருப்பது பெண் அல்ல; ஆண் என்பதை குரலை வைத்து கண்டுபிடித்தனர். அவரை கண்காணித்தனர். சிறிது நேரத்துக்கு பின் அவர், படுதா இல்லாமல் கையில் பையுடன் வந்து, அணை நுழைவாயிலுக்கு வந்தார்.
சந்தேகமடைந்த போலீசார், பையை சோதனையிட்ட போது, இளம் பெண் அணியும் உடைகள், லிப்ஸ்டிக், நக சாயம் இருந்தது.அந்த இளைஞரை போலீஸ் நிலையத்துக்கு, அழைத்து சென்றனர். விசாரணையில் அவரது பெயர் கிஷோர், 22, ஹாசனை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. ஹாசனில் பேக்கரி வைத்துள்ளார். இவர் உடல் ரீதியில் பெண்ணாக உணர்வதால், இளம்பெண் போன்று உடையணிகிறார். தனக்கு திருமணம் செய்ய, பெற்றோர் பெண் தேடுகின்றனர். இவர் மறுத்தும் கேட்கவில்லை. எனவே வீட்டை விட்டு வெளியேறியதாக, கிஷோர் கூறியுள்ளார்.ஆனால், அவர் ஹாசனிலிருந்து, ஆலமட்டிக்கு வந்தது ஏன், அதிகாலையே அணை பகுதிக்குள் நுழைய முயற்சித்தது ஏன் என, போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement