அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா ஆஜர்: விசாரணை இன்றுடன் நிறைவு!

அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். அதன்படி, சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, ராகுல் காந்தி விசாரணைக்கு ஏற்கனவே ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில்,
காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி கடந்த 21ஆம் தேதி முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 26ஆம் தேதி (நேற்று) இரண்டாம் கட்ட விசாரணைக்காக சோனியா காந்தி ஆஜரானார். அதன் தொடர்ச்சியாக, நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா காந்தி இன்று ஆஜராகியுள்ளார். முதல் நாளில் விசாரணை மூன்று மணி நேரம் நடைபெற்ற நிலையில், நேற்றையதினம் சுமார் 5 மணி நேரம் என மொத்தம் 8 மணி நேரம் சோனியா காந்தியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

சோனியா காந்தி பதில்களை விரைவாக அளித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். அத்துடன் சோனியா காந்தியிடம் இன்றுடன் விசாரணை நிறைவு பெறலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

முன்னதாக, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடைபெறுவதாகவும், ஆளும் பாஜக அரசு மத்திய அமைப்புகளை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியினர், நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தி கைது செய்யும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.