‘மிஷன் வாத்சல்யா’ திட்டமானது சிறார் நீதி சட்ட  நிபந்தனைகளுக்கு உட்பட்டது: மத்திய அரசு

புதுடெல்லி: “மிஷன் வாத்சல்யா திட்டம் தனியார் உதவியுடைய பங்களிப்பின்கீழ் நிறுவனம் சாரா பராமரிப்பு மூலம் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறது. இதில் ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள் கடினமான சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு உதவ முடியும். இத்தகைய ஏற்பாடுகள் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 மற்றும் அதன் விதிகளின்படி நிபந்தனைகளுக்கு உட்பட்டது ” என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ, “கைவிடப்பட்டவர்கள் அல்லது காணாமல் போன குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ‘மிஷன் வாத்சல்யா’ திட்டத்திற்காக தனியார் துறை மற்றும் தன்னார்வக் குழுக்களுடன் கூட்டு சேர மத்திய அரசு திட்டமிடுகிறதா? அப்படியானால், அதன் விவரங்கள்; மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்போடு இத்திட்டம் எவ்வளவு தூரம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது, அதன் விவரங்கள்?” குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி அளித்துள்ள பதில்: “மிஷன் வாத்சல்யா திட்டம் என்பது நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs) இணைந்த, வளர்ச்சி மற்றும் குழந்தை பாதுகாப்பு முன்னுரிமைகளை அடைவதற்கான ஒரு வரைபடமாகும். இது குழந்தை உரிமைகள், மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

மேலும் ‘குழந்தைகளை விட்டுவிடாதீர்கள்’ என்ற முழக்கத்துடன், சிறார் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் – 2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் – 2012 ஆகியவை இந்தப் பணியைச் செயல்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குகின்றன. மிஷன் வாத்சல்யா திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிதி வழங்கப்படுகின்றன.

நாடு முழுவதும் அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நிதிப் பகிர்வு முறையே மத்திய, மாநிலங்களுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவைகளுக்கு நிதிப் பகிர்வு முறை 90:10 என்ற விகிதத்தில் உள்ளது. சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவீதம் மத்திய அரசு பங்காகும்.

மிஷன் வாத்சல்யா திட்டமானது, தனியார் உதவியுடைய பங்களிப்பின்கீழ் நிறுவன சாரா பராமரிப்பு மூலம் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறது. இதில் ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள் கடினமான சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு உதவ முடியும். குழந்தை மற்றும் குழந்தைகள் குழு, நிறுவனத்திற்கு நிதியுதவி செய்யும் தனிநபர்கள், பொது / தனியார் துறை நிறுவனங்களை, ஊக்குவிக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர். இத்தகைய ஏற்பாடுகள் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 மற்றும் அதன் விதிகளின்படி நிபந்தனைகளுக்கு உட்பட்டது ஆகும்” என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.