உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு போதிய அளவு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருந்தாலும், அப்பெண்கள் வெற்றி பெற்றால் ஆதிக்கம் செலுத்துவது பெரும்பாலும் அவர்களின் கணவர்களாகத்தான் இருக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற பெண்கள் களத்தில் இறங்கி பணியாற்றக்கூட சில கணவர்கள் அனுமதிப்பதில்லை.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பதில் அவர்களின் கணவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டது அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தமோஹ் மாவட்டத்தில், சமீபத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, பஞ்சாயத்து அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இம்மாவட்டத்தில் உள்ள கைசாபாத் உட்பட சில பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்கும் புகைப்படங்கள், வீடியோ வெளியாகி இருக்கின்றன.
பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்கள், தலைவராக பதவி ஏற்கவில்லை. மாறாக, வெற்றி பெற்ற பெண்களுக்கு பதில் அவர்களின் கணவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். சில பதவி ஏற்பு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பெண்கள் கலந்து கொள்ளக்கூட இல்லை. அவர்களின் கணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பதவிப்பிரமாணம் செய்து வைத்த அதிகாரிகளும் இதனை அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக சிலர் புகார் செய்ததை தொடர்ந்து, இப்பிரச்னை சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரி அஜய் ஸ்ரீவாஸ்தவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ’சில இடங்களில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பதில் அவர்களின் கணவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. அது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறோம். சட்டத்திற்கு எதிராக நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து விசாரித்து, அறிக்கை கிடைத்தவுடன் தவறு செய்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பெண்களை பதவியேற்க வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்றார்.