மூடப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகள் திறப்பிற்கு எதிராக ஆக.15-ல் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன்

சென்னை: “மூடப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகளை எல்லாம் திறந்து வணிக நோக்கோடு பயன்படுத்துவதற்கு கார்ப்பரேட்டுகளையும், ஓஎன்ஜிசியையும் களமிறக்குகிற முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. இதனைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி மன்னார்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது. “திமுக ஆட்சி இன்றைக்கு தடை செய்யப்பட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தை ரத்தனக் கம்பளம் விரித்து, மூடப்பட்ட விபத்து ஏற்படக்கூடிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளை எல்லாம் திறந்து, வணிக நோக்கோடு பயன்படுத்துவதற்கு கார்ப்பரேட்டுகளையும், ஓஎன்ஜிசியையும் களமிறக்குகிற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட அளவிலான அதிகாரிகள், ஏதோ ஓர் அழுத்தத்தால் முதல்வரின் உத்தரவையே மீறி, அதனை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். இதனைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டத்தை மன்னார்குடியில் நடத்துகிறோம். அதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோரியுள்ளோம். அவரும் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.