நிலுவை எண்ணிக்கை 5 கோடியை எட்டுகிறது 50 வழக்கை முடிப்பதற்குள் 100 வழக்குகள் பதிவாகிறது; ஒன்றிய சட்ட அமைச்சர் வேதனை

புதுடெல்லி: நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 50 வழக்கை தீர்த்து வைப்பதற்குள், 100 புதிய வழக்குகள் பதிவாவதாக கூறி உள்ளார். டெல்லியில் ஆயுதப்படை தீர்ப்பாயம் சார்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பங்கேற்றனர். கூட்டத்தில் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: நீதித்துறையில் நிலுவை வழக்குகளை குறைக்க அரசு நவீன தொழில்நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

இந்த விஷயத்தில் மாற்று குறைதீர்ப்பு நடைமுறைகள் வலுவாக இருப்பதன் மூலமும் நிலுவை வழக்குகள் எண்ணிக்கையை குறைக்கலாம். அந்த வகையில், ஆயுதப்படை தீர்ப்பாயம் விரைவாக நீதியை நிலைநாட்ட வேண்டும். இந்தியாவில் உள்ள நிலுவை வழக்குகளையும், மற்ற நாடுகளையும் நிச்சயம் ஒப்பிட முடியாது. ஏனெனில், நமது நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கி வருகிறது. ஆனால், பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி கிடையாது. இங்கு 50 வழக்குகளை நீதிபதிகள் முடித்து வைப்பதற்குள், 100 புதிய வழக்குகள் பதிவாகின்றன. காரணம், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.