‘ரசிகர்களின் அன்புதான் எங்கள் உயிர்’ – ‘விருமன்‘ வெற்றி கொண்டாட்டத்தில் கார்த்தி உருக்கம்

மதுரையில் நடைபெற்ற ‘விருமன்’ திரைப்பட வெற்றி கொண்டாட்டத்தில் நடிகர் கார்த்தி, சூரி, அதிதி சங்கர், இயக்குநர் முத்தையா உள்ளிட்டோர் திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்து கேக் வெட்டி கொண்டாடினர்.

‘கொம்பன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வெளியாகி உள்ள படம் ‘விருமன்’. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி, ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 3-ம் தேதி ‘விருமன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ‘விருமன்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ‘விருமன்’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள பிரியா காம்பளக்ஸ் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து திரைப்படக்குழுவினர் வெற்றியை கொண்டாடினர்.

image

நடிகர் கார்த்திக், இயக்குநர் முத்தையா, நடிகை அதிதி, நடிகர் சூரி ஆகியோர் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்ததோடு, கேக் வெட்டி ‘விருமன்’ திரைப்பட வெற்றியை கொண்டாடினர். தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசுகையில், “இங்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. சென்னையில் கூட வெற்றியை கொண்டாவில்லை. இங்கு வந்து கொண்டாடினால் திருப்தி என்பதால் மதுரைக்கு வந்துள்ளோம். ‘பருத்தி வீரன்’ படத்துக்கு பின்னர் லோக்கலா இதுபோன்ற படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றியையும் பெற்றுத் தந்துள்ளது.

மதுரை ரசிகர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. திரையரங்குகளுக்கு பொதுமக்கள் வருகை தர தொடங்கியுள்ளனர் என்பதை ‘விருமன்’ வெற்றி காட்டியுள்ளது. ரசிகர்களின் அன்புதான் எங்கள் உயிர். ‘விருமன்’ படத்தை வெற்றியடைய செய்த ரசிகர்களுக்கும், திரையரங்கு நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி” இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் சூரி பேசுகையில், “மதுரை விசில், மதுரை கைதட்டலே எப்போதும் வேற லெவலில் இருக்கும் , எந்த வித முடிவு என்றாலும் அது மதுரையில் இருந்து தான் வெளிவரும். ‘விருமன்’ பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு என பொதுமக்கள் கூறியதாக திரை உரிமையாளர்கள் தெரிவித்தனர்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இயக்குநர் முத்தையா பேசுகையில், “மதுரையில் ‘விருமன்’ வெற்றி விழா கொண்டாடியது மகிழ்ச்சி, எப்போதும் மதுரைக்கு பெருமை சேர்ப்பது போல நடந்து கொள்வேன். ‘விருமன்’ திரைப்படத்திற்கு வாய்ப்பளித்த சூர்யா சாருக்கு நன்றி. அவருக்கு கடமைபட்டுள்ளேன்” என பேசினார். நடிகை அதிதி பேசுகையில், “படத்தை வெற்றி அடைய செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. சன்டே அன்று சண்டை போடலாம். ஆனால் மண்டே அன்று மண்டைய போட முடியுமா என விமானத்தில் சூரி அண்ணனிடம் நகைச்சுவை சொன்னேன்” இவ்வாறு பேசிய அவர், தொடர்ந்து மதுரை வீரன் அழகுல என பாட்டு பாடினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.