2028-க்குள் புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால் வளர்ச்சி தேக்கமடையும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: “2028-ம் ஆண்டிற்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லையெனில் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியின், தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி தேக்கமடையும். மேலும், விமானப் போக்குவரத்து மற்றும் அதன் தொடர்புடைய பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பலன்களையும் தமிழ்நாடு இழக்கும் சூழ்நிலை ஏற்படும்” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பயணிகள் போக்குவரத்தின் ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) (2009-2019 காலத்தில்), சராசரியாக 9 விழுக்காடு ஆகும். இவ்வளர்ச்சி விகிதத்தின்படி, தற்போதைய விமான நிலையம் அதன் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகும், 2028 ஆம் ஆண்டில் அதன் அதிகபட்ச அளவான ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகள் என்ற எண்ணிக்கையை எட்டும்.

தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில், பொது மக்கள் வசிக்கும் நிறைய குடியிருப்புகளும் கட்டடங்களும் நிறைந்திருப்பதாலும், நிலத்தின் மதிப்பு மிக அதிக அளவில் இருப்பதாலும், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அவசியம் தேவையான நிலத்தை கையகப்படுத்துவது மிகவும் கடினமாகும். மேலும், ஏற்கனவே அமைந்துள்ள மூன்று விமான நிலைய முனையங்கள் (Terminals) மற்றும் தற்போது கட்டப்பட்டு வரும் நான்காவது முனையம் ஆகியவை இணையாக அமைந்துள்ளதால், முனையங்களுக்கு அருகில் விமானங்கள் நிறுத்தும் இடத்தினை தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைப்பது கடினமாகும்.

சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மட்டுமின்றி, தென்னிந்திய மாநிலங்களின் வளர்ந்து வரும் வணிகம், வர்த்தகம், தொழில்கள், சுற்றுலா, விமான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சென்னைக்கு அருகில் ஒரு புதிய விமான நிலையம் அமைப்பது மிகவும் இன்றியமையாததாகும். மேலும், சென்னையுடன் தமிழ்நாட்டின் இதர நகரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைப்பதற்கும், உலக வளர்ச்சியுடன் இணைந்து செயல்படுவதற்கும், புதிய விமான நிலையத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

இந்திய விமானப் பயணிகள் போக்குவரத்தில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், 2008ம் ஆண்டில் மூன்றாவது இடத்தை வகித்தது. தற்போது, 5வது இடத்தினை வகிக்கிறது. 2008ம் ஆண்டில், 5வது இடம் வகித்த அப்போதைய பெங்களூர் விமான நிலையம், புதிய விமான நிலையம் அமைத்தப் பின், சென்னை விமான நிலையத்தை விட அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை முறையே 14 விழுக்காடு மற்றும் 12 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. அதே வேளையில், சென்னை விமான நிலையத்தின் வளர்ச்சி 9 விழுக்காடு மட்டுமே.

2028ற்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லையெனில் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியின், தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி தேக்கமடையும். மேலும், விமானப் போக்குவரத்து மற்றும் அதன் தொடர்புடைய பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பலன்களையும் தமிழ்நாடு இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.

எனவே தான் பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையம், அடுத்த 30-35 வருடங்களுக்கான எதிர்கால விமான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்படவுள்ளது. மேலும், தற்போதுள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமும் தொடர்ந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய அளவிலான விமானங்கள் நிறுத்துவதற்கும், விமான நிலைய முனையம் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு அமைப்பதற்கும், சுமார் 4700 ஏக்கர் தொடர்ச்சியான நிலங்கள் தேவைப்படுகின்றது. பல்வேறு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, தொடர்ச்சியான நிலங்கள், பரப்பு, நில அமைப்பு மற்றும் சமூக பொருளாதார காரணிகளை கருத்திற்கொண்டு, பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.