தஞ்சாவூர் அருகே ‘இன்னும்’ ஆற்றில் இறங்கி பிணத்தை எடுத்துச்செல்லும் அவல நிலை!

‘யாருப்பா இப்ப சாதி பாக்குறா’ என்ற சொலவடை இருப்பதுபோல, இப்பலாம் பிணத்தை எறிக்க மெஷின் வந்துடுச்சி எல்லாம் மாறிடிச்சு என்ற மேட்டிமைச் சொற்களும் உலவுகின்றன. எல்லாம் மாறிவிட்டது என்ற நினைப்பு பலரிடம் உதிக்கும்போதெல்லாம் கிராமங்களில் இருந்து வரும் யதார்த்தம், ‘இல்லை. அப்படியெல்லாம் ஒன்றும் மாறிவிடவில்லை’ என்று முகத்தில் அறைகிறார்போல சம்பவங்களை தந்துகொண்டே இருக்கிறது. 

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே உள்ள நெப்பு கோவில் என்கிற நெய் குப்பை பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்வதற்கு உரிய பாதை இல்லாமல் தவித்து வருகின்றனர். மாயனத்திற்கு உடலை எடுத்து செல்ல வேண்டும் என்றால், அப்பகுதியில் செல்லும் மண்ணியாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். 

ஆனால் மண்ணியாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் உடலை தூக்கிக்கொண்டு ஆற்றில் இறங்கி தண்ணீரில் நனைந்தபடிதான் செல்ல வேண்டும். இதில் பல சிக்கல்கள் உண்டு. தண்ணீர் இல்லாத நாட்களில் எந்த பிரச்னையும் இல்லாமல் ஆற்றைக் கடந்து பிணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிடலாம். கனமழை வெள்ளம் போன்ற சமயங்களில் ஆற்றில் தண்ணீர் செல்லும் போது உடலை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆற்றில் வேகமாக ஓடும் தண்ணீருக்கு மத்தியில் பிணத்தை விழாமல் தூக்கிச் செல்லும் நிலையை யோசித்துப் பாருங்கள்.

 இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த மணி என்ற முதியவர் நேற்று உயிரிழந்தார். தற்போது மண்ணியாற்றில் தண்ணீர் செல்வதால், அவரது உடலை தகனம் செய்ய மயானப்பகுதிக்குப் புறப்பட்டனர். தற்போது தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மழைபெய்து வருவதால் மணியாற்றில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் உயிரிழந்த மணியின் உடலை அவரது உறவினர்கள் இடுப்பளவு ஆற்று தண்ணீரில் இறங்கி எடுத்துச் சென்றனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மயானத்திற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துவிட்டோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இரு கரைகளிலும் உடலை எடுத்துச் செல்வதற்காக படிகளை கட்டி கொடுத்துள்ளனர். அது ஆற்றில் இருந்து ஏறுவதற்கு மட்டுமே வசதியாக இருக்கிறது. ஆற்றையே எளிதாக கடக்கும் வகையில் சிறிய பாலம் ஒன்றைக் கட்டிக்கொடுக்க வேண்டும். ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.