தெற்கு ரயில்வேயில்தான் இந்த கொடுமை… என்னான்னு நீங்களே படிங்க!

தங்களின் நெடுந்தூர பயணங்களுக்கு பொதுமக்கள் பேருந்தைவிட ரயிலில் பயணிக்க முக்கியத்துவம் தருவதற்கு அதன் பயணக் கட்டணத்துடன், அதில் கழிப்பறை வசதி இருப்பதும் முக்கிய காரணம். இதன் காரணமாகவே நடுத்தர மற்றும் வயோதிகர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் எப்போதும் ரயிலில் பயணிக்கவே விரும்புகின்றனர்.

பயணிகளுக்கு ஒவ்வொரு கம்பார்ட்மென்டிலும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கானோரை சுமந்து கொண்டு பயணிக்கும் ரயில்களை இயக்கும் ஓட்டுநர்கள் பெரும்பாலானோருக்கு எஞ்சினில் கழிப்பறை வசதி இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நாடு முழுவதும் ஓடும் ரயில்களில் வெறும் 120 மின்சார ரயில்களில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளதும், இதில் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ரயில்களில் ஒன்றில் கூட இந்த அடிப்படை வசதி இல்லை என்பதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் (RTI) கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை ஆண்களுக்கு இணையாக பெண் ஓட்டுநர்களும் இயக்கிவரும் நிலையில், அவர்கள் மணிக்கணக்கில் மிகுந்த கவனத்துடன் பணியாற்றும் இடமான எஞ்சினில், அவர்களின் அடிப்படை தேவையான கழிப்பறை வசதி கூட இல்லாதது மிகவும் கொடுமையானது.

ரயில்வே துறை இந்த வசதியை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் என்ற குரல்கள் இந்த ஆர்டிஐ தகவலுக்கு பின் ஒலிக்க துவங்கி உள்ளன. தூய்மை இந்தியா குறித்து பேசும் அரசின் காதுகளில் இந்த குரல்கள் கேட்குமா என பார்ப்போம்.

தெற்கு ரயில்வே, மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே என நாடு முழுவதும் மொத்தமுள்ள 16 ரயில்வே கோட்டங்களில் மொத்தம் 1500 பெண் ஓட்டுநர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.